SuperTopAds

ஒருதலை பட்சமாக செயற்பாடும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஆசிரியர் - Editor II
ஒருதலை பட்சமாக செயற்பாடும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில்  எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி ஒருதலைப் பட்சமாக இடம்பெறும் செயற்பாடுகள் காரணமாக குறித்த கூட்டத்திலிருந்து வெளியேறியதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு செல்லாமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் 

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என விரும்பி  அதற்கான செயல்பாடுகளை கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டோம். 

தமிழரசு கட்சி உட்பட தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் குறித்த அழைப்பை விடுத்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக தமிழரசு கட்சியும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத நிலையில் சட்டத்தரணிகள் பேரவை தாங்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப் போவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் தெரிவித்தார்கள்.

 தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஏற்பாடு செய்த கலந்துரையாடலுக்கு சென்றோம். 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும்  கட்சி என்ற வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பிரதிநிதிகள் மூவர் கலந்து கொள்ளலாம் என முதல் அழைப்பு கிடைத்தது சென்றோம். 

குறித்த கலந்துரையாடலில் தமிழரசு கட்சி சுமந்திரன் நிபுணர் குழு சார்பில் இருவரை அழைப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும் என பெயர்களை குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை கூட்டத்துக்கான அழைப்பு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பங்குபெற்றல் என குறிப்பிடப்பட்டது.

மாறாக நிபுணர் குழுவை அழைப்பதாக இருந்தால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் காத்திரமான பங்கை ஆற்றுகின்ற தமிழ் சிவில் அமைப்பு பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம் தமிழரசு கட்சி மறுத்தது.

எமக்கான அழைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆக விடுக்கப்பட்ட நிலையில் அதில் தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கினோம் நாங்கள் தமிழ் தேசிய பேரவையாக பங்காளி கட்சிகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்குமான அழைப்பை விடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம்.

குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கலந்துரையாடலுக்கு சில மணித்தியாலங்கள் முன்பதாக அனுமதி தரலாம் என சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்தது.

 உடனடியாக எல்லோரும் கொழும்புக்கு வர முடியாது Zoom மூலம் கலந்துகொள்ள அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்த நிலையில் ஒருவர் மட்டும் நேரடியாக சென்றிருந்தார் ஏனையவர்கள் zoom மூலம் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சி சுமந்திரன் Zoom மூலம் கலந்து கொள்ள முடியாது என முரண்பட்ட நிலையில் அதிலிருந்து நாம் விலகினோம். 

ஏற்பாடு செய்த தமிழ் சட்டத்தரணிகள் பேரவை zoom மூலம் கலந்து கொள்ளலாம் என தெரிவித்த போதும் தமிழரசு கட்சி அதனை நிராகரித்தமை ஏற்க முடியாத விடயம். 

அது மட்டுமல்லாது எமது கோரிக்கையான சிவில் அமைப்புகளை அனுமதிப்பதை நிராகரித்த சுமந்திரன் தான் கேட்டுக்கொண்ட நிபுணர் குழுவை  அனுமதிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டமை பக்க சார்பான விடயமாக பார்க்கிறோம்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம்  உள்ள தமிழ் கட்சிகளுக்கான கூட்டம் என அழைத்துவிட்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத தமிழ் கட்சியை கூட்டத்துக்கு அழைத்தது யார்?  எனக் கேட்க விரும்புகிறேன்.

சரி தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பியவர்கள் ஏன் தமிழ் சிவில் அமைப்பு பிரதிநிதிகளை அழைப்பதற்கு தயங்குவதன் பின்னணி என்ன? 

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களை திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் சமஸ்டித் தீர்வினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் வலியுறுத்திய நிலையில் அதற்கு இணங்கிய நிலையில் இரண்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.

ஆனால் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை மீறி சிலரால் எதேச்சை அதிகாரமான ஒருதலைப் பட்சமான தீர்மானங்களை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வகிபாகம் என்பது காத்திரமான பங்கை வகிக்கின்ற நிலையில் அவர்களையும் இணைத்து தீர்வு விடையங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதே சிறந்த விடயம்.

ஆகவே தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுயாதீனமாக செயல்படாமை காரணமாக தொடர்ந்தும் அந்த க் கூட்டங்களில் பங்களிப்பு செய்வது அர்த்தமற்ற விடயம் என கருதிய நிலையில் கூட்டத்துக்கு செல்ல வில்லையன மேலும் தெரிவித்தார்.