SuperTopAds

வடக்கில் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது - ஆளுநர் கவலை

ஆசிரியர் - Editor II
வடக்கில் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது - ஆளுநர் கவலை

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர்  இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது, 

 வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளமையைச் சுட்டிக்காட்டியதுடன், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை அரச திணைக்களங்கள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

சட்டவிரோதப் பண்ணைகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், பாரம்பரிய கடற்றொழிலாளர்களுடன் முரண்படாமல் இந்தப் பண்ணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது முதலீட்டாளர்கள் மற்றும் பண்ணையாளர்களால் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள தாமதங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தென்பகுதியை விட வடக்கில் அனுமதிகளைப் பெறுவதில் அதிக தாமதங்கள் நிலவுவதாகவும் கவலை வெளியிடப்பட்டது.

  இக்கலந்துரையாடலில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர், கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்