யாழில். வீதி ஒன்று நீண்டகாலமாக புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள் பறிபோனது

யாழ்ப்பாணம் , உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
மானிப்பாய் பிரதேச சபை மாதாந்த அமர்வு தவிசாளர் தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது,
உயரப்புலம் வீதியானது நீண்ட காலமாக புனரமைக்காத நிலையில் காணப்படுகிறது. அந்த வீதியால் நோயாளர் காவு வண்டிகள் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
குறித்த வீதியால் நோயாளர் காவு வண்டி வரமுடியாததால் இதுவரை நான்கு உயிர்கள் பலியாகி உள்ளன. இன்னமும் எத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் அந்த வீதியை புனரமைப்பீர்கள்? எனவே விரைவாக அந்த வீதியை புனரமையுங்கள் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதற்கு தவிசாளர் ஜெசீதன் பதில் அளிக்கையில்,
வீதிகள் புனரமைப்புக்கு வரையறுக்கப்பட்ட நிதியை எமக்கு கிடைக்கிறது. இயன்ற அளவு நாங்கள் வீதி அபிவிருத்திகளை செய்கின்றோம்.
பிரச்சினைகளுக்குரிய வீதிகள் தொடர்பான விபரங்களை வழங்குங்கள், விசேட நிதிகள் ஏதாவது கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நாங்கள் புனரமைப்போம் என்றார்.




