மீண்டும் தமிழர் தரப்பை குற்றவாளியாக காட்டும் அநுர அரசு

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது.
இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.
இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
மேலும், மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது.
ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது. நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவித்தார்




