SuperTopAds

‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால் நூதன போராட்டம்

ஆசிரியர் - Editor II
‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால் நூதன போராட்டம்

தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் விடுதலையை வலியுறுத்தி, " விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம் " எனும் தொனி பொருளில் யாழில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார். 

பிள்ளையின் நீண்ட பிரிவுத்துயர் தாங்காது, தாய் தந்தை இருவரும் உயிர்நீத்த நிலையில், பெற்றவர்களது இறுதிச் சடங்குகளுக்கு ஒரு ஆயுள் தண்டனை கைதியாக கைவிலங்குடன் கொண்டுவரப்பட்டு சிதைகளுக்கு கொள்ளியிட்ட பின்பு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். 

இந்நிலையில், பார்த்தீபனின் தாயாரான அமரர் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அம்மையார் அவர்களின் மூன்றாமாண்டு நினைவேந்தல் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில்,  பார்த்தீபன் உட்பட்ட சக தமிழ் அரசியல் கைதிகள் உயிர்ப்புடன் விடுதலை பெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டுமென்ற பிரார்த்தனையுடன், நூதன போராட்டம் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பிரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

 அதாவது, குடும்பத்தின் உற்ற உறவுகளை இழந்தும் பிரிந்தும் நீண்ட நெடுங்காலங்களாக அடிமைச்சிறை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்ப்புடனான விடுதலையை வலியுறுத்தும் முகமாக "விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தைளைத்திட ஒரு குவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்..! " எனும் கருப்பொருளில், சமூக  ஆர்வலர்களின்  கரம் இணைத்து தொடர உள்ளனர்.

 

இப்போராட்டத்தில் நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் இருந்து ஒரு குவளை தண்ணீரை பொதுக் குவளைக்கு உவந்தளிப்பதன் மூலம், 

நாட்டப்படும் 'விடுதலைப் பெருவிருட்சம்'  வேரூன்றி தளைத்திட உங்களது பங்களிப்பையும் அர்ப்பணிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 அதற்கமைய, இந்த மனிதநேயப் பணியில் இனம் மதம் மொழி கடந்து நல்லுள்ளம் கொண்ட அனைவரும் தம்மை இணைத்துக் கொள்ளவேண்டுமென 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.