SuperTopAds

நானாட்டான், முசலியில் என்பிபி ஆட்சி!- தோள் கொடுத்தது சங்கு.

ஆசிரியர் - Admin
நானாட்டான், முசலியில் என்பிபி ஆட்சி!- தோள் கொடுத்தது சங்கு.

முசலி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (25) காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் முசலி பிரதேச சபையில் நடைபெற்றது.     

இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயூ நலீம் மற்றும் தொழிலாளர் கட்சி உறுப்பினர் முகமது காமில் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இதன்போது சபையில் உள்ள 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இதன்போது தொழிலாளர் கட்சி உறுப்பினர் முகமது காமில் 07 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயு நலீம் 09 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

அதி கூடிய வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயு நலீம் முசலி பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கி இருந்தனர்.

உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது, இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அப்துல் ரசீது தன்ஸீல் உப தலைவராக தெரிவு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (25) காலை 8.30 மணி அளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நானாட்டான் பிரதேச சபையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஜெறோம் இருதயதாஸ் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

இதன் போது சபையில் உள்ள 17 உறுப்பினர்களில் சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்தார். ஏனைய 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஜெறோம் இருதய தாஸ் 06 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் 10 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். அதி கூடிய வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தொழிலாளர் கட்சி, சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கி இருந்தனர். உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஞானராஜ் சோசை போட்டியின்றி உப தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.