தனியார் பேருந்து சேவைப் புறக்கணிப்பு யாழ்ப்பாணத்திலும் முன்னெடுப்பு
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தால் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் சேவைப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு யாழ்ப்பாண பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் யாழ்ப்பாணத்திலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவர் என அந்த இணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையம் கிளைச் சங்கங்களுக்கு இன்று அனுப்பிவைத்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்த காரணத்தால் எமது தனியார் பேருந்துகளின் சேவைக் கட்டணங்களை அதிகரித்தல் தொடர்பாக நாடுமுழுவதும் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களும் இணைந்து போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுக்கள் நடத்தியது.
அந்தப் பேச்சுக்கள் தோல்விகண்டதால், அதனைக் கண்டித்து இன்று (16) நள்ளிரவு முதல் எமது கோரிக்கைகளுக்கு நியாயமான பதில் கிடைக்கும் வரை நாடுமுழுவதும் சேவைப் புறக்கணிப்புக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படுவதாலும் பேருந்து உரிமையாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதாலும் யாழ்ப்பாண பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் கீழ் வரும் கிளைச் சங்கங்கள் தமது பேருந்து சேவைகளை இன்று நள்ளிரவு இடைநிறுத்தி போராட்டத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது – என்றுள்ளது.