காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசு: ஆனந்தசங்கரி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. அரசாங்கமும் தமிழ் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் விட்ட முக்கிய பிரச்சினைகளில் இதுவுமொன்று. திராணியற்று அரசிடம் சோரம்போன தமிழ் தலைமைகளின் செயற்பாடுகளால் இந்தப் பிரச்சினை நீண்டுகொண்டே போகிறது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு,காணாமலாக்கப்பட்ட உறவுகள் மேற் கொண்டு வரும் போராட்டத்திற்கு அரசாங்கம் ஒரு தீர்வினை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழர்களின் அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்ற நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஒன்றான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு நியாயமான தீர்வினை கூறாமல் காலம் கடத்தி இழுத்தடித்து வருகிறது. இவ்விடயம் ஜனநாயகத்தை விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்விடயத்தை அரசுக்கு எடுத்துகூறி தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாத தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வெட்கி தலைகுனிய வேண்டும். வெற்றிபெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை இவர்களை பார்த்து சென்றும் பராமுகமாய் இருப்பது வேதனை தரும் விடயமாகும். இவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத தமிழ் பிரதிநிதிகள் தமது பதவிகளை துறக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.