இரவோடு இரவாக ஜனாதிபதியை சந்தித்த சம்பந்தன்: நியாயமான வலியுறுத்தல் சாத்தியமாகுமா?
தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தேசிய பிரச்சினை தீர மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் வலியுறுத்தியிருக்கின்றார்.
வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருவரும் தனித்து இந்த சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த நாட்டு மக்கள் தெளிவான ஆணையினை உங்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த ஆணையினை நிறைவேற்றவேண்டும். அதனை நிறைவேற்றக்கூடிய அரசாங்கம் ஒன்றே அமைக்கப்படவேண்டும். மக்களுடைய இந்த ஆணைக்கு விரோதமானவர்கள் அரசாங்கத்தில் இருந்தால் அந்த ஆணையை நிறைவேற்ற முடியாது போய்விடும் என்று சம்பந்தன் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியிருக்கின்றார்.
மேலும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டு மக்களால் ஜனாதிபதிக்கு ஒரு ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணை ஜனநாயகத்தை உறுதிசெய்வது, சர்வாதிகாரப் போக்கை இல்லாதொழிப்பது, தேசிய பிரச்சினைக்கு ஒரு நியாயமான நிரந்தரமான தீர்வைக் கண்டு சமத்துவத்தை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, மனித உரிமைகள்-, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்படுவது, சுதந்திரமான நீதியை ஏற்படுத்துவது என்பவற்றை உள்ளடக்கியதாகவே இந்த மக்கள் ஆணை அமைந்திருந்தது. அந்த ஆணையை அவர் நிறைவேற்றவேண்டும். எனவும்,
தமிழ் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி தேர்தலின்போது பெருவாரியான வாக்குகளை அவருக்கு வழங்கியுள்ளனர். அந்த ஆணையை அவர் நிறைவேற்றுவார் எனக் கருதியே அவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். இந்த நிலையில் அவர்கள் ஏமாற்றப்படக்கூடாது. தமிழ் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்று இந்த சந்திப்பில் தான் வலியுறுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.