முக்கிய படுகொலையில் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் விரைவில் கைது
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லசந்த படுகொலை தொடர்பில் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த படுகொலை தொடர்பாக இந்த இராணுவ அதிகாரி ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அதேவேளை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, கல்கிசைக் காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால, படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது தகவல்களை மறைத்தார் அல்லது அழித்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய, உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் மற்றும், ஏனைய சிலரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன