பேய்க்குப் பயந்த யாழ்ப்பாண கடைக்காரர்கள் ஐயரைக் கொண்டு செய்த வேலை இது
பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றங்காடிக் கடைத்தொகுதியில் மாநகர சபையின் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாந்தி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் உள்ள சிற்றங்காடியில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்தனர் எனவும் அதற்கு அங்கு பேய் நடமாட்டம் இருப்பதே காரணம் எனவும் வர்த்தகர்களால் கூறப்பட்டு வந்தது.
இதனால் கொழும்பு சுகாதார அமைச்சு இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கையிடுமாறு பணிக்கப்பட்டிருந்தது. கொழும்பு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய அண்மையில் சிற்றங்காடி பகுதியில் சுகாதாரப் பிரிவினர் ஆய்வை மேற்கொண்டதுடன் அங்குள்ளவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் இறந்தவர்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்தநிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிற்றங்காடி யில் பூஜை எதுவும் இடம்பெறாமையாலும், பேய் உள்ளது என மூட நம்பிக்கை மக்கள் மத்தியில் உலாவியதாலும் மக்களது மனநிறைவுக்காக அங்கு சமய முறைப்படி சாந்தி, காவல் போன்றன செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.